Friday, June 1, 2012

கடவுள் வாழ்த்து - 1

குறள்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பொருள்:
'எழுத்துக்களுக்கெல்லாம் 'அ' முதலானதாயிருப்பதுபோல உலகுக்கு இறைவன் முதல்வனாக இருக்கிறான்.'

"அகரம்" என்றால் புள்ளி என்று பொருள்.எல்லா எழுத்துக்களும் புள்ளியை முதலாக கொண்டே எழுகின்றன.வரிவடிவங்களுக்கு முதலெழுத்து புள்ளி.(புறத்தில்).  எழுத்துக்கள் இல்லாத மொழிகளும் புள்ளியையே ஆதாரமாக கொண்டே எழுகிறது. எவ்வாறெனில் வாயிலிருந்து வார்த்தையாய் வெளிவருவதற்கு முன் அது எண்ணமாய் இருந்தது.
எண்ணம் நினைவு என்ற புள்ளியிலிருந்து தோன்றுகின்றது. இந்த நினைவே அகரம் என்றழைக்கப்படுகிறது.(அகத்தில்)

(அகர முதல=அகர ம்+உதல,உதலம்=உலகம்)
அகரம் என்றால் நினைவு.உதலம் என்றால் உலகம்.

நான் உள்ளவரை உலகம் உண்டு.உலகம் உள்ளவரை நான் உண்டு. என்னையும் உலகத்தையும் பிணைக்கின்ற சக்தி ஒன்றும் உண்டு.அதுவே ஆதி. இந்த ஆதியை முதலாக கொண்டே உலகமும் நானும்.

அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்.

கதை:
மனிதக் குரங்குகள் குரங்கு மனிதர்களாய் வாழ்ந்த காலமது.

மலைஅடிவாரத்தில், குகைகளுக்குள், மிருகத்தோலாடைகளுடன் வாழ்ந்துவந்தனர் அவர்கள். சைகையும் ஒலிகளும் நிறைந்த மொழி ஒன்றைப் பேசினர். இயற்கைக்கு அஞ்சி நடுங்கினர். குழுவாக வேட்டையாடி கிடைப்பதை ஒன்றாய் பகிர்ந்தனர்.

வயதானப் பெண் ஒருத்தி ஒருநாள் இந்தக் கூட்டத்தைவிட்டுப் பிரிந்தாள். நெடுந்தூரம் நடந்தாள். மலையின் உச்சியை அடைந்து இயற்கையை கவனிக்கத் துவங்கினாள்.
வானின் நட்சத்திரங்களைக் கணக்கெடுத்தாள். பூமியின் சுழற்சியை கண்டுகொண்டாள். செடிகொடி வளர்ப்பதை தெரிந்துகொண்டாள். தீயை உருவாக்கி கட்டுக்குள் வைத்திருக்கப் பழகினாள். கோள்களின் பாதையைப் புரிந்துகொண்டாள். காட்டில் விளைபவைகளில் விஷத்தையும் உணவையும் பிரித்தறியும் அபூர்வ உணர்வு அவளுக்கிருந்தது. பல ஆண்டுகள் கழித்து இயற்கைபற்றிய பயம் நீங்கியவளாய் மலையிலிருந்து கீழிறங்கினாள்.

தொலைந்துபோனவள் திரும்ப வருவதை வேடிக்கையாய் பார்த்தனர் கீழிருந்தவர்கள். அவளிடம் ஏதோ மாற்றம் தெரிந்தது. அவள் முகம் ஒளியில் மிதப்பதைப் போலொரு பிரம்மை மேற்கொண்டது.

மக்களைப் பார்த்ததும் கைகால்களை அசைத்து ஒருவகை நாட்டியமாடினாள் இவள். இதுவரை அவர்கள் அறிந்திராதது அந்த நாட்டியம்.

"உண்மைகளை அறிந்துகொண்டேன்" என்றாள்.

"சொல்" என்றனர், சிலர் ஏளனத்துடனே.

"சொல்லொண்ணா பேரின்பம்." என்றாள்.

"பைத்தியக்காரி." என்றனர்.

"ஆமாம். அசாதாரணச் சிந்தனை கொண்டவர்கள் பைத்தியங்கள்தான்." என்றாள்.

"அவளை விடுங்கள்." பெரியவர் ஒருவர் முன்வந்தார்."உனக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. சொல் அதை எங்களுக்கும்."

"இயற்கை." என்றாள்

"விளக்கு." என்றார்.

அவளுக்குப் புரிந்ததைச் சொன்னாள். புரியாமல் விழித்தனர் மக்கள்.

"புரியச்செய்". என்றனர்.

கதைகளாகச் சொன்னாள் அவள் கண்டவைகளை.

"எப்படி நம்புவோம் உன்னை?" என்றனர்.

"நாளை பகலில் இரவு தோன்றும் பாருங்கள்." என்றாள்.

கேலி செய்தனர் அவளை. கல்லால் எறிந்து கொல்வோம் என்றனர். நாளைவரை பொறுத்திருக்கச் சொன்னார் பெரியவர்.

அந்த சூரியக் கிரகண நாளுக்குப்பின் உலகின் முதல் மதம் தோன்றியது. 

No comments:

Post a Comment